நாயாறு , நந்திக்கடல் பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

நாயாறு களப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு பகுதியில் வர்த்தமானி அறிவித்தலின் படி காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதினால் பாதிப்படைந்த பொதுமக்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கு வழங்கிய முறைப்பாட்டினை தொடர்ந்து கௌரவ ஆளுநர் அவர்கள் இது தொடர்பில் ஆராயும் கூட்டம் 03 ஒக்ரோபர் 2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

2017ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நாயாறு மற்றும் நந்திக்கடல் பகுதியினை வர்த்தமானி அறிவத்தல் மூலம் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவதந்தனர். ஆனாலும் அப்பிரதேசத்தினுள் மக்களினுடைய தனியார் காணிகளும் வயற்காணிகளும் இருந்தமையினால் தற்பொழுது வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் அப்பகுதி மக்களுக்குமிடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் இக்கூட்டத்தில் ஆராய்ப்பட்டது.

இது தொடர்பில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் வனஜீவராசிகள் திணைக்களத்தினுள் கொண்டுவரப்பட்ட மக்களின் காணிகளின் அளவினை இனங்கண்டு அவற்றினை மீளவும் வர்த்தமானி அறிவித்தலின் படி பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

மேலும், இவ்இரண்டு களப்பு பகுதிகளிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடைவிதித்துவருவதாகவும் பொதுமக்கள் முறைப்பாடு தெரிவித்திருந்தமை தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அப்பகுதி மக்கள் காலாகாலமாக செய்துவந்த பாரம்பரிய மீன்பிடிமுறையை செய்யமுடியும் என்றும் இந்த இரு களப்பு பகுதிகளையும் சுத்தம் செய்ய 2018 இல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இது வரை எதுவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் முல்லைத்;தீவு மாவட்ட செயலாளர் ஆளுநர் அவர்கள் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனைத்தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடியியல் துறையினை தொடர்ப்புகொண்டு களப்பு பகுதி மீன்படி தொடர்பில் ஆய்வு செய்து உடனடியாக வனவிலங்கு திணைக்களத்திற்கு சமர்ப்பித்து நந்திக்கடல் பகுதியில் துப்பரவுப்பணியை மேற்கொள்ளுமாறும் அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்மாறும் வனவஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஆளுநர் அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

வன ஜீவராசிகள் திணைக்கத்தினால் பொதுமக்களின் காணிகள் விவசாய நிலங்கள் என்பன இதற்குள் அடங்குவதால் அவற்றை மீள் வர்த்தமானி மூலம் கௌரவ ஜனாதிபதி அவர்களின் உதவியுடன் மக்களிடம் மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் அவர்கள் இதன்போது மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு