நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பதவியே எனது முதல் நியமனம். தீவக மக்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பில் எனக்குத் தெரியும். இந்தப் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு இயன்றவரையில் முயற்சிசெய்வேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
திரு. திருமதி சிவப்பிரகாசம் வாசன் ஜெசிந்தா தம்பதியரின் திட்ட உருவாகத்தில், புலம்பெயர் தேசத்தில் வாழும் நயினாதீவு உறவுகள் மற்றும் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்க வாறன்டோர்ப் கிளையின் நிதிப் பங்களிப்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை கடற்படையின் கட்டுமானத்தில் அமையப்பெற்ற நயினாதீவு பிரதேச மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் இன்று சனிக்கிழமை காலை (12.07.2025) திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் கட்டடம் 66 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதுடன் தளபாடங்கள், மருத்துவ உபகரணங்கள் என்பன நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபை, சுகாதாரத் திணைக்களம், நலன்விரும்பிகளால் வழங்கப்பட்டுள்ளன.
சுகாதார மற்றும் ஊடக கௌரவ அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்றொழில் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன்பத்திரன, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், ஊர்காவற்றுறை மற்றும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரிகள், கடற்படையினர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ஆளுநர் தனது உரையில், மக்களுடைய பங்களிப்பும் ஒத்துழைப்பும் இருந்தால் எந்தவொரு அபிவிருத்தியையும் எப்படி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்பதற்கு இந்த மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் சிறந்த எடுத்துக்காட்டு. கடற்படையினர் இந்தக் கட்டடத்தை சிறப்பான முறையில் கட்டி முடித்து ஒப்படைத்துள்ளனர். 1991ஆம் ஆண்டிலிருந்து கடற்படையினருடன் பணியாற்றியிருக்கின்றேன். அவர்களால் இந்தப் பிரதேசங்களிலுள்ள துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு அபிவிருத்திப் பணிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் உலக வங்கியினரை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கப் பணித்துள்ளார். அவர்களும் இந்தப் பகுதிகளை வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கின்றனர். பெரும்பாலும் அடுத்த ஆண்டு அந்த அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகும் என நினைக்கின்றேன். அவர்களால் தீவகப் பகுதிகளிலுள்ள சில இறங்குதுறைகள் புனரமைக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். அதனூடாக இந்தப் பகுதியின் சுற்றுலாத்துறை மேம்படும், என்றார் ஆளுநர்.