திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது

திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் 21 மார்ச் 2019 அன்ற முற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு நாளை மறுதினம் 23 ஆம் திகதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கண்டியில் இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு திரிபீடகாபிவந்தனா வாரம் நாடுமுழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன் அதனை வடமாகாணத்தில் சிறப்பிக்கும் வகையில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனையுடன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் யாழ்பாண மாவட்டத்திலுள்ள விகாரைகளின் விகாராதிபதிகளுக்கான தானம் வழங்கும் நிகழ்வு யாழ் நாக விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் திரிபீடகம் தொடர்பில் விசேட ஆய்வுகளை மேற்கொண்டுவரும் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கலாநிதி கிரிஷ்ணராஜா அவர்களினால் திரிபீடகம் தொடர்பில் விசேட சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பௌத்த பிக்குகளுக்கான தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர், பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.