போர் – இடப்பெயர்வுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் எப்படியொரு சமநிலை இருந்ததோ அதைப்போன்றதொரு நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை (02.07.2025) பாடசாலையில் பதில் அதிபர் இ.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநரும், சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராஜாவும், கௌரவ விருந்தினராக வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலனும் கலந்துகொண்டனர்.
பாடசாலைக்கு தனது நிலத்தை கொடுத்த அமரர் சுப்பிரமணியம் கனகசபையின் திருவுருவச் சிலையை ஆளுநர், திரைநீக்கம் செய்து வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் நகுலன் நூலும் வெளியீடும் செய்யப்பட்டது.
இங்கு தனது பிரதமர் விருந்தினர் உரையில் ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, வலி. வடக்கு பிரதேசம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசம். மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. பல குடும்பங்கள் இங்கு வந்து மீளக்குடியமர வேண்டியிருக்கின்றார்கள். விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கூட மக்களை இன்னமும் குடியமர்த்தவேண்டிய தேவை இருக்கின்றது.
இடப்பெயர்வின் பின்னர் சொந்த இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாது ஆரம்பிக்கப்பட்ட உங்களின் பாடசாலை இன்று படிப்படியாக வளர்ச்சியடைந்திருக்கின்றது. இந்தப் பாடசாலையில் பணியாற்றிய அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சரியான தலைமைத்துவமே அதற்குக்காரணம்.
அன்று அதிக மாணவர்களை கொண்டு இயங்கிய பாடசாலைகள் கூட இன்று இயங்க முடியாமல் மூடவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நகரப் பகுதியை நோக்கி போரால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் இப்பகுதிக்கு வருவதற்கு விரும்பவில்லை.
வலி. வடக்கை பொறுத்தவரை பாடசாலைகளில் வளப் பற்றாக்குறைகள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. இந்த வருடம் நிதி ஒதுக்கபட்டுவிட்டதால் அடுத்த வருடம் கிடைக்கும் நிதியில் இந்தப் பகுதி பாடசாலைகளின் கோரிக்கைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்றைய காலத்தில் சொத்துக்களை மோசடி செய்து சொத்துக்களை – காணிகளைச் சேர்க்கும் பலர் இருக்கின்றனர். ஆனால் பாடசாலைகளுக்கு காணியை கொடுத்து உதவும் சுப்பிரமணியம் கனகசபை போன்ற எண்ணம் உள்ளவர்களால்தான் இன்றும் பல பாடசாலைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன.
பணத்தையோ, காணியையோ, சொத்துக்களையோ சேர்ப்பதால் நின்மதியையும் – சந்தோசத்தையம் பெற்றுக் கொள்ள முடியாது. மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதால் மாத்திரமே நின்மதியான – சந்தோசமான வாழ்க்கையை வாழ முடியும். மாணவர்கள் இந்தப் பழக்கத்தை பழகவேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களை மதிக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு உதவுவதற்கு பலர் வருவார்கள். பிறருடைய சொத்துக்களுக்கு ஆசைப்படக் கூடாது. அப்படி பிறர் சொத்தை நாம் அபகரித்தால் எங்கள் சொத்துக்களைத்தான் நாங்கள் இழக்கவேண்டிவரும், என்றார் ஆளுநர்.