இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் (Sri Lanka – Canada Business Council) ஒருங்கிணைப்பில், இவ்வாண்டு இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்படவுள்ள தொழில் முனைவோருக்கான விருது வழங்கல் நிகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (16.02.2026) மாலை நடைபெற்ற இக்கலந்துரையாடலில், விருது வழங்கல் நிகழ்வைச் சிறப்பான முறையில் நடத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இவ்விருது வழங்கல் நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட புத்தளம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது, எந்தெந்தத் துறைகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன என்பது குறித்தும், விருதுகளுக்கான தகுதிநிலைகள் மற்றும் தெரிவு முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இவ்விருதுத் திட்டம் குறித்துத் தொழில் முனைவோரிடையே விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரடியாகச் சென்று, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கு இவ்விருதுத் திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்களை வழங்குவதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், விவசாயம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டச் செயலகங்கள் சார்பிலுமான பிரதிநிதிகள், முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




