வவுனியா மாவட்டத்தில் பரசூட் முறையிலான நெற் செய்கை தொடக்க விழா நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளத்தைச் சேர்ந்த விவசாயியான திரு. ஆ. தேவராசா அவர்களின் வயலில் பரசூட் முறையிலான நெற் செய்கை தொடக்க விழாவானது 11.04.2025 அன்று வவுனியா மாவட்டச் செயலாளர் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், பாடவிதான உத்தியோகத்தர், அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பரசூட் முறையிலான நெற் செய்கையில் விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெற முடிவதுடன் உற்பத்திச் செலவும் குறைவாகக் காணப்படுவதால் அதிகளவிலான இலாபத்தினைப் பெற முடிகின்றது. கடந்த வருடங்களில் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பரசூட் செய்கையில் ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிலிருந்து உயர் விளைச்சலாக 7.2 மெட்ரிக் தொன்கள் கிடைக்கப்பெற்றிருந்தது.
இந் நிலையில் 2025 சிறுபோகத்திலும் இப் பரசூட் முறையானாது அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் PSDG திட்டத்திலும் வவுனியா மாவட்டத்தில் 60 ac விஸ்தீரணத்தில் பரசூட் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.