எமது அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை முற்றுமுழுதாக வறிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தும், என கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட வேலைத்திட்டத்தின் இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள ‘நெலும் பியச’ கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2023/2024 கல்வியாண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அதியுயர் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதற்கமைய, வடக்கு மாகாணத்தில் சாதனை படைத்த 274 மாணவர்களுக்கு, தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவிக் காசோலைகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் இந்நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை ஊக்குவிப்பதும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய திறமைசாலி மாணவர்களுக்கு கைகொடுப்பதுமே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்நிகழ்வில் கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
மேலும், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீபவானந்தராஜா மற்றும் க.இளங்குமரன் ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும், பெருமளவான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இச்சிறப்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.










