பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார்.*

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். சப்பைக்கட்டு காரணங்களைச்

சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம், இன்று (20.12.2025) சனிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர், அதிகாரிகளின் மந்தமான செயற்பாடுகள் குறித்துத் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

‘கடந்த ஓராண்டாக நான் பல விடயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம். ஒரு தடவை சொன்னால் அதனைச் செய்து முடிக்க வேண்டும். உங்களது செயற்பாடுகளால் நான் விரக்தியடைந்திருக்கின்றேன். நான் எனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கு எதையும் கூறவில்லை. இந்த மாகாணத்தின் கல்வியை மேம்படுத்தவே பணிப்புரைகளை வழங்குகிறேன். ஒரு சாதாரண இடமாற்றத்தைக் கூடச் செய்ய முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் நீங்கள் ஏன் அந்தப் பதவிகளில் இருக்கிறீர்கள்?’ என ஆளுநர் கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘எல்லாவற்றுக்கும் மேலதிகாரிகளிடமே கேட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இல்லாவிடின் பதவிகளை விட்டுச் செல்லுங்கள்’ எனவும் அவர் வலியுறுத்தினார்.

கல்வித் துறையில் பழிவாங்கும் நோக்கோடு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைக் கடுமையாகச் சாடிய ஆளுநர், ‘இங்கே பழிவாங்குவதற்குத் தரும் முக்கியத்துவத்தை, பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துங்கள். பிள்ளைகள் கல்வியில் மேம்படுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதனாலும் வராது. அதற்குரிய திட்டங்களைத் தயாரியுங்கள். ஒவ்வொன்றையும் களத்துக்குச் சென்று ஆராயுங்கள்’ என அறிவுறுத்தினார்.

அடுத்த ஆண்டுக்கான திட்டமிடல்கள் குறித்துப் பேசுகையில், அண்மையில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளின் தேவைகளுக்குக் கட்டாயம் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். அத்துடன், பின்தங்கிய கிராமங்களிலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்தி, அரைகுறையாக உள்ள கட்டடங்களைப் பூர்த்தி செய்தல் மற்றும் உண்மையான தேவைப்பாடுகளை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் 2026ஆம் ஆண்டுக்காகத் திணைக்கள ரீதியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

கல்வித் திணைக்களம்: 1207 மில்லியன் ரூபா

விளையாட்டுத் திணைக்களம்: 113 மில்லியன் ரூபா

முன்பருவ பிள்ளை வளர்ச்சி: 75 மில்லியன் ரூபா

கலாசாரத் திணைக்களம்: 38 மில்லியன் ரூபா

மேற்படி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்துத் துறைசார் பணிப்பாளர்கள் விளக்கமளித்தனர். வேறு நிதி மூலங்களிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களை இந்த நிதியில் உள்ளடக்க வேண்டாம் எனவும், மாகாணத்துக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் பணித்தார். தேவைப்பாடுகள் அதிகமாக உள்ளமையால் மேலதிக நிதியைக் கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம் மற்றும் திட்டமிடல்), மாகாணக் கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், துறைசார் மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.