வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்களை ஒருங்கிணைத்து பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றிற்கான ஒருங்கிணைந்த பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (14.11.2025) ஆளுநர் செயலகத்தில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் தொடக்கத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்துக்கான ஒருங்கிணைந்த பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மாகாண நிர்வாகத்துக்கும், வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், இணைந்து செயல்படும் தளத்தை உருவாக்கவும் இந்த பொதுக்கட்டமைப்பு முக்கிய பங்காற்றும் என அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் ஏற்கனவே செயற்பட்டு வரும் வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்களின் பிரதிநிதிகள், இந்த பொதுக்கட்டமைப்பு அமைப்பை ஒருமனதாக வரவேற்றதோடு, அதை நடைமுறைப்படுத்துவதற்கான தமது பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.

இதை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட பின்னர், இந்த மாத இறுதியில் மேலும் ஒரு கலந்துரையாடல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்கள் யாராவது இந்த பொதுக்கட்டமைப்பில் இணைந்து கொள்ள விருப்பம் கொண்டால், 24.11.2025 முன்னதாக npcgovernor@gmail.com என்ற ஆளுநர் செயலக மின்னஞ்சலுக்கோ அல்லது 070 233 3222 என்ற ஆளுநர் செயலக வட்ஸ்அப் இலக்கத்துக்கோ தகவலை அனுப்பிக் கொள்ளலாம்.