உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (08.08.2025) நடைபெற்றது.

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

உலக வங்கியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.

உலக வங்கியால் முதல் கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள திட்டங்கள், அதன் தயார் நிலைமை என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் புதிதாக எத்தகைய திட்டங்களை உள்ளடக்க வேண்டும் என்பது தொடர்பிலும், அதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் சில திட்டங்களுடன் தொடர்புடைய திணைக்களங்களுடன் ஆராய்ந்து அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர், கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இணைப்பாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், உதவிப் பணிப்பாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையினர் ஆகியோர் பங்கேற்றனர்.