யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு பரந்தளவில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்த தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார்.
தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27.06.2025) கலந்துரையாடினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், வெள்ளை ஈ தாக்கத்தால் தேங்காய் உற்பத்தி பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது எனவும், இதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்துடனேயே வந்துள்ளதாகத் தெரிவித்த சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல், அது தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளித்தார்.
அடுத்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் இரு வாரங்கள் யாழ்ப்பாணத்தில் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக கொழும்பிலிருந்து 100 இயந்திரங்கள் (High power water gun) கொண்டு வரப்படவுள்ளன. அத்துடன் அதை இயக்குவதற்கான ஆட்களும் அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களுடன் நான் உட்பட உயர் அதிகாரிகளும் இங்கு வரவுள்ளோம். இரு வாரங்களும் இங்கு தங்கியிருந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம். யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, உடுவில், கோப்பாய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இதனை முதல் கட்டமாகச் செயற்படுத்தவுள்ளோம் என்று குறிப்பிட்டதுடன், இதற்கான உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் தேவை எனவும் ஆளுநரிடம் கோரினார்.
இந்தத் திட்டத்தை வரவேற்ற ஆளுநர், மாகாணத்தின் சகல வளங்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்பதற்குரிய ஒத்துழைப்புக்கள் அனைத்தும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இந்தத் திட்டத்துக்கு தேவையான ஆளணி மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட ஏனைய வசதிகளை வழங்குவதற்கும் ஆளுநர் இணங்கினார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர் யோகேஸ்வரன், யாழ்ப்பாணம் விவசாயப் பிரதி மாகாணப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.