செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம்

இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் யாழ் இந்திய துணைத்தூதரகமும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் மற்றும் மகளிர் விவகார சமூகசேவைகள் அமைச்சு, யாழ் மாவட்ட செயலகம், மாகாண சமூகசேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியாவின் ஜெய்பூரிலுள்ள பகவான் மகாவீர் விக்லாங் சஹாயட்ட சமித்தியினுடைய தொழில்நுட்ப உதவியுடன் இம் மாகாணத்தில் இரண்டாவது தடவையாக செயற்கை அவயவம் பொருத்தும் இலவச முகாம் ஒன்று இம்மாதம் 04.06.2024 -20.06.2024 வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்ட திறன் விருத்தி நிலையம், பழைய பூங்கா வீதி, சுண்டிக்குளியில் நடைபெற்று வருகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சு இதற்கான அனுசரணையை வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய சமூகசேவைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்புடன் ஏற்கனவே பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளது. தங்கள் அவயங்களை துரதிஷ்டவசமாக இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கௌரவமான சமுதாய வாழ்வை மீளக் கொடுக்கும் முகமாகவும் அதே நேரம் அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுப்பெறச் செய்யும் நோக்கோடும் இம் முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இம் முறை 350 பயனாளிகள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இம் முறை இந்திய ஜெய்பூர் தொழில்நுட்பவியலாளர்களுடன் புதிய நுட்ப பரிட்சயத்துக்காக யாழ் ஜெய்பூர் மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிலைய தொழில்நுட்பவியலாளர்களும் இணைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.