மாகாண விளையாட்டு விழா – 2024 – மென் பந்து கிரிக்கெட் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 2024.05.31 ஆம் மற்றும் 01.06.2024 ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப இறுதி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு இடையேயான இப்போட்டியில் ஐந்து மாவட்டத்;தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். ஆண்களுக்கான போட்டி 31.05.2024 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் யாழ்ப்பாண மற்றும் மன்னார் மாவட்ட அணிகளுக்கிடையே நடைபெற்றது. ஏனைய ஆண்களுக்கான போட்டிகள் 01.06.2024 ஆம் திகதி காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றது.

அத்துடன் பெண்களுக்கான போட்டிகள் வவுனியா இளம் நட்சத்திர விளையாட்டுக்கழக மைதானத்தில் 01.06.2024 ஆம் திகதி காலை ஆரம்பமாகி நடைபெற்றது. போட்டிகள் யாவும் அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் நிறைவு பெற்றது. போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அணி முதலாமிடத்தையும் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி 2ம் இடத்தையும் வவுனியா மாவட்ட ஆண்கள் அணி 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

பெண்கள் அணி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அணி முதலாமிடத்தையும் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணி 2ம் இடத்தையும் மன்னார் மாவட்ட பெண்கள் அணி 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இப் போட்டியில் கலந்து கொண்டு திறமையினை வெளிக்காட்டி முதலாம், இரண்டாம் இடங்களைப்பெற்ற ஆண்; பெண் போட்டியாளர்கள் அணி எதிர்வரும் 14.06.2024 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய மகாவலி மைதானத்தில் நடைபெறவுள்ள 48 வது தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.