கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவைச் சிகிச்சை

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையானது (Total Knee replacement surgery) 28 ஜனவரி 2019 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியான எலும்பு முறிவு சிகிச்சை நிலையமற்ற நிலையில் மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இவ் அறுவை சிகிசையானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல வளப் பற்றாக்குறைகள் உள்ள போதும் வைத்தியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக இச்சத்திர சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் எலும்பு முறிவு சத்திரசிகிச்சையியல் நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சசிகரன் தலைமையிலான சத்திரசிகிச்சைக் குழுவினர் மூத்த மயக்கமருந்தியல் வைத்தியர் பா.நாகேஸ்வரன் உட்பட வைத்தியர்கள், தாதியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட அணியினர் இணைந்து இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர்.

மூட்டுவாதம் காரணமாக நடக்க முடியாது சிரமப்பட்டு வந்த 63 வயதான ஒருவருக்கே இச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகளை விரிவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுவரும் பணிப்பாளர் வைத்திய கலாநிதி காண்டீபன் மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆகியோரது ஒத்துழைப்பினைப் பெற்று இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

கிளிநொச்சியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சத்திரசிகிச்சையானது தனியார் வைத்தியசாலைகளில் 5 இலட்சம் ரூபா வரை செலுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய ஒரு பாரிய சத்திரசிகிச்சையாகும். எனவே பல வளப் பற்றாக்குறைகளுடன் தனியான எலும்பு முறிவு சிகிசைக்கான தனியான சத்திர சிகிச்சை கூடம் இல்லாது பொதுவான சத்திரசிகிச்சை கூடத்தில் வைத்தே இச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சைக்காக யாழப்பாணம் போதான வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 width=500

 width=500